‘மிஸ்டு கால்’ கட்சிக்கு இந்த நிலையா?...பா.ஜனதாவை ‘கலாய்த்த’ ஜிக்னேஷ் மேவானி...
தமிழகத்தில் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி நோட்டாவைக் காட்டிலும் மிகக்குறைவாக வாக்குகள் பெற்றதை குஜராத் தலித் அமைப்பு தலைவர் ஜிக்னேஷ் மேவா கிண்டல் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டம், மேகு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ் மேவானி(வயது35). குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உனா கிராமத்தில் தலிக்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து சட்டம் பயின்ற ஜிக்னேஷ் மேவானி தலித் அஸ்மிதா யாத்திரையை தொடங்கி பா.ஜனதாவுக்கு எதிராக நடத்தி பெரும் எழுச்சியை உண்டாக்கினார்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் வட்காம் தொகுதியில், காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடிட்டு ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜனதா கட்சியை குறித்து மேவானி கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி நோட்டாவைக் காட்டிலும் குறைவாக வாக்குகளைப் பெற்று மோசமான தோல்வி அடைந்தது. நோட்டாவுக்கு 2,373 வாக்குகள் கிடைத்த நிலையில்,தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு 1,417 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இது குறித்து ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் நேற்று கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
உலகிலேயே மிகப்பெரிய ‘மிஸ்டு கால்’ கட்சி, தமிழகத்தில் 50 லட்சம் மிஸ்டு கால் கொடுத்து தொண்டர்களை சேர்த்த பா.ஜனதா கட்சி ஆர்.கே. நகர் தேர்தலில் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
இது நோட்டாவுக்கு கிடைத்த 2,373 வாக்குகளைக் காட்டிலும் குறைவானதாகும். ஊத்தாப்பத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளையும் பா.ஜனதா சேர்த்துபோட்டு சாப்பிட்டு ஜீரணம் செய்து கொள்ளும் என நம்புகிறேன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.