Jayalalithaa daughter no one! Amruta fake!

ஜெயலலிதாவின் மகள் யாருமில்லை என்றும், மகள் என கூறி வருபவர் போலியானவர் என்றும் ஜெ.தீபா கூறியுள்ளார்.

தருமபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஜெ.தீபா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மகள் என யாருமில்லை. தற்போது ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி வரும் அம்ருதா போலியானவர் என்றார். 

அவரை யாரோ, இயக்கி வருவதாகவும். அது சசிகலாவின் குடும்பமா? அல்லது எதிர்கட்சிகளா? என தெரியவில்லை என்று சந்தேகம் எழுப்பினார். ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாக தவறான தகவல் பரப்பி, ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.

தற்போது தமிழகத்தில் நடைபெறுவது மக்களுக்கான ஆட்சி இல்லை. பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சி தொடரக் கூடாது என்றார். சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

மத்திய அரசால் இயக்கப்படுகிற ஆட்சிதான் தமிழகத்தில் இயங்கி வருகிறது- தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை வழங்கிய அடுத்த நாளே, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இது எல்லாமே திட்டமிட்டே நடந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை என்றார். மேலும், தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்போவதாகவும் ஜெ.தீபா கூறினார்.