ஜெயக்குமாரை அலறவிட்ட ஆளுங்கட்சி.. ஒருவழியாக 3 வழக்கிலும் ஜாமீன்..
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 3 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததையடுத்து 18 நாட்கள் சிறைவாசத்தில் இருந்து வெளியேவருகிறார்.
எதிர்கட்சிகளின் கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர்களே வாய் திறக்காத நிலையில் கெத்தாக ஒற்றை ஆளாக நின்று எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழியாக தான் வெளியவே வரும் அந்தளவிற்கு அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்டடது. அதிமுகவின் மீது எழுந்த எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் தனி ஒருவனாக இருந்து பதில் அளித்து வந்தார் ஜெயக்குமார், அப்படிப்பட்ட ஜெயக்குமாரை தான் கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு..
அடுத்தடுத்த வழக்கில் கைது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் அதிமுகவினர் அங்கே நின்று கொண்டிருந்த தி.மு.க பிரமுகரைப் பிடித்து தாக்கியதோடு அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமாரின் இல்லத்தில் நுழைந்த தண்டையார் பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர். இதனால் இந்த இரண்டு வழக்குகளில் ஜாமின் கிடைக்காமல் சிறையிலேயே சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
3 வழக்கிலும் ஜாமின்
இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த ஜெயக்குமாருக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்தது திமுக அரசு, மகேஷ் என்பவருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிரவுண்ட் தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதால் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைத்தும் இந்த வழக்கின் காரணமாக சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் சிவில் நீதிமன்றம் ஜாமின் மறுத்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 நாட்களாக சிறையில் இருந்த ஜெயக்குமார் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக அரசின் பிரச்சார பீரங்கியாக இருந்து அனைத்து கேள்விக்கு தனி ஒரு ஆளாக நின்று பதிலளித்த ஜெயக்குமார் மீண்டும் தனது திமுக அரசுக்கு எதிரான தனது எதிர்ப்பை தொடங்கவுள்ளார்.