jayakumar says that stalin want to be CM of Tamilnadu

சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வரலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைப்பதாக தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணையுமா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று எடப்பாடி டீம் சொன்னாலும், ஓ.பி.எஸ். அணியோ அதற்கான முயற்சிகளில் ஆர்வம் காட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. 



சட்டமன்ற உறுப்பினர் செம்மலையின் பேச்சே அதற்குச் சான்று. சேலத்தில் நேற்று ஓ.பி.எஸ்.ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னர் பேசிய செம்மலை, எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக இருப்பதாகக் கூறி திரி கொளுத்திப் போட்டார். 

இதற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். பாரதிதாசனின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செம்மலை கூறியது அவரது கருத்தா?, அல்ல ஓ.பி.எஸ். அணியின் கருத்தா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். காலம் கனிந்துவிட்டாலும் பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.எஸ்.அணியினர் வர மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். அதிமுகவில் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.