கோபம் தீர்ந்ததும் காசோலையை வாங்கி கொள்வார்கள் - ஜெயக்குமாரின் சர்ச்சை பேச்சு...
அனிதாவின் குடும்பத்தினர் தற்போது கோபத்தில் உள்ளனர். கோபம் தீர்ந்தவுடன் காசோலையை வாங்கி கொள்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது.
இதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது.
இதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தமிழக அரசு அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் படித்தவருக்கு தகுந்த அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனிதாவின் குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியபோது அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அனிதாவின் குடும்பத்தினர் தற்போது கோபத்தில் உள்ளனர். கோபம் தீர்ந்தவுடன் காசோலையை வாங்கி கொள்வார்கள் என தெரிவித்தார்.