அம்மா ஆட்சியை அசிங்கப்படுத்திய ஜெயா டி.வி.: உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடியார்...
அ.தி.மு.க. அணிகளுக்குள் நடக்கும் மோதலின் உச்சகட்ட வெளிப்பாடு கடந்த ஞாயிறன்று விஷூவலாக நடந்திருக்கிறது. நடப்பது அம்மா ஆட்சி! ஜெயலலிதாவின் ஆட்சி! என்று எந்த ஆட்சியை எடப்பாடி அணி ஜெயலலிதாவின் முகமூடியை போட்டு நகர்த்தி வருகிறதோ, எந்த ஆட்சியை உட்கட்சி எதிரணிகளின் கவிழ்ப்பு சதியிலிருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்துகிறதோ அதே ஆட்சியை ‘நடப்பது ஆட்சியா?’ என்று கேவலமாக வறுத்தெடுக்கிறது ஒரு தொலைக்காட்சி! கலைஞர் நியூஸ்தானே! என்று காலர் தூக்குனீர்களென்றால் காண்டாகிவிடுவோம். ஜெயா டி.வி. பாஸ், ஜெயா டி.வி!
ஆம் ஜெயா டி.வி.யில் தமிழக பிரச்னைகள் குறித்து ஞாயிறு மாலையில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. ஜால்ராவை மட்டுமே இசைக்கும் வழக்கமான நிலைய கலைஞர்கள் இல்லாமல் புதிய நபர்களை களமிறக்கியிருந்தார்கள். ‘நடு நிலையாக பேசுகிறேன் பேர்வழி’ என்றபடி அமர்ந்த ஒரு நபரின் உடம்புக்குள் ஜெ., ஆன்மா புகுந்துவிட்டதோ என்னவோ! மனிதர் பின்னிப் பெடலெடுத்துவிட்டார்.
நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மோகன்ராஜிடம் அந்த புதிய நபர் ’இங்கு நடப்பது ஆட்சியா? ஒரு விஷயத்தை பற்றி பேசுகையில் ஒரு அமைச்சர் ஆம் என்கிறார், இன்னொரு அமைச்சரோ இல்லை என்கிறார். அரசின் ஏதாவது ஒரு துறையைப் பற்றி இவர்கள் உருப்படியாக பேசுகிறார்களா? அதைப்பற்றி பேச இவர்களுக்கு தகுதி இருக்கிறதா?டி.டி.வி.யோடு போவேன் என்கிறார் ஒருவர், இன்னொருவரோ போகக்கூடாது என்கிறார். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கேவலமாக நினைக்கிறார்களா! சசிகலா படத்தை தலைமை கழகத்திலிருந்து எடுத்த அமைச்சர்கள், அவரை வசைபாடவும் செய்தனர். ஆனால் இவர்கள் சில மாதங்களுக்கு முன் அவரது காலில் விழுந்தார்களே?” என்று சொல்லி எகிடுதகிடாக எகிறித்தள்ளிவிட்டார் அந்த நபர்.
ஆளாளுக்கு ஷாக் ஆகி அந்த நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி பாலூற்றிவிட்டார்கள்.
இருந்தாலும் யாரோ சிலர் எதேச்சையாக ஜெயா சானல் பக்கம் போனதில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மேலிடத்தில் ஓத, விவகாரம் எடப்பாடி வரைக்கும் பாய்ந்துவிட்டது. அவரோ விவேக் வரை போன் போட்டு பாய்ச்சலும், நோகலுமாக பேசிவிட்டாரம்.
அமைச்சர்களுக்கோ நம்பமுடியாத ஷாக். ‘அம்மா சேனலே அம்மாவின் ஆட்சியை காய்ச்சியெடுப்பதா?’ என்று புலம்பி தீர்த்திருக்கிறார்கள்.
ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது, விவாதத்தில் கலந்து கொண்ட புதிய நபர் விபரமின்றி நடந்து கொண்டார் என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக சேனல் தரப்பிலிருந்து ஆளும் அணிக்கு விளக்கம் தரப்பட்டதாம்.
ஆனால் இதை நம்பாத பழனி அண்ட்கோ இது முழுக்க முழுக்க தினகரன் ஆடும் ஆட்டம், விவேக்கை கையில் வைத்துக் கொண்டு ஜெயா டி.வி.யில் தன் புகழ் பாட வைத்தவர் இப்போது ஆட்சியையே அசிங்கப்படுத்துமளவுக்கு போய்விட்டாரே...என்று புலம்பி, தங்களின் ஆபத்பாந்தவரான திவாகரனுக்கு போன் போட்டு சொல்லியிருக்கிறார்கள். அவரும் ‘அடுத்த டைம் அக்காவை (சசிகலாவை) பார்க்கிறப்ப இதை சொல்றேன்.’ என்று சமாதானம் செய்திருக்கிறார்.
ஆனால் தினகரன் அணி இதற்கெல்லாம் அலட்டிக் கொண்டா மாதிரி தெரியவில்லை, எடப்பாடியை டியூன் செய்து கொண்டிருக்கும் திவாகரனின் பேச்சை டிராப் செய்து லைவ் ரிலே செய்து அவரை அரசியல் ஆட்டத்திலிருந்து காலி செய்தாலும் ஆச்சரியமில்லை என்கிறது அம்மா சேனல் வட்டாரம்!
ஹூம்! அந்தம்மா இந்த வீட்டை எப்படி வெச்சிருந்துச்சு இப்படி அந்தலிசிந்தலி ஆக்கிட்டேங்களேய்யா!