மாவீரன் பிரபாகரனை இழிவுபடுத்துவதா..? துல்கர் சல்மானுக்கு எதிராக கொந்தளித்த ஜவாஹிருல்லா..!
மாவீரன் பிரபாகரன் பெயரை வரனே அவஸ்யமுன்ட் படத்தில் அவமானப்படுத்தியதற்காக மன்னிப்பு மட்டும் போதாது துல்கர் சல்மான். காட்சியை முழுவதையும் நீக்க வேண்டும். இதுவே தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதற்கு அளவுகோலாக அமையும்.
மலையாள இயக்குனர் அனுப் சத்யன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து கடந்த பிப்ரவரி 7ம் தேதி வெளியான திரைப்படம் ’வரனே அவஷ்யமுண்டு’. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட இப்படம் தான் தற்போது தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் இருக்கும் நிலையில் டிஜிட்டலில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரனே அவஷ்யமுண்டு படமும் வெளியானது. அந்த படத்தில் சுரேஷ்கோபி வளர்க்கும் ஒரு நாயின் பெயருக்கு தமிழர்கள் கொண்டாடும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயர் சூட்டி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த தகவல் இணையத்தில் வைரலாக தமிழர்கள் பலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வரனே அவஷ்யமுண்டு படத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் உடனடியாக மன்னிப்பு கேட்ட நடிகர் துல்கர் சல்மான் அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டது அல்ல என்று கூறினார். எனினும் அவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா படக்காட்சியை நீக்க வேண்டும் என தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், மாவீரன் பிரபாகரன் பெயரை வரனே அவஸ்யமுன்ட் படத்தில் அவமானப்படுத்தியதற்காக மன்னிப்பு மட்டும் போதாது துல்கர் சல்மான். காட்சியை முழுவதையும் நீக்க வேண்டும். இதுவே தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதற்கு அளவுகோலாக அமையும், என்று குறிப்பிட்டுள்ளார். அதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.