இளைஞர்களின் அடுத்த டார்கெட் சுங்கச்சாவடிகள்
ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களிடையே ஒரு தகவல் பரவலாக ஓடுகிறது அவர்களுக்கு பரிமாரப்படும் செய்தியாக அடுத்து சுங்கச்சாவடி கட்டணங்களை கட்ட மறுப்போம் என்கிற கோஷத்தை முன் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களின் ஆதரவை பெறும் என்பது வெளிப்படை.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அதிகம் பாதிக்கும் ஒரு விஷயம் சுங்கச்சாவடி. தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் சுங்கக்கட்டணங்கள் குறித்து பொதுவாக அதிருப்தி நிலவி வருகிறது. இதற்கு காரணம் அதிகமான சுங்கச்சாவடிகள் , சுங்ககட்டணங்கள் , சுங்கச்சாவடியில் ஊழியர்களின் அராஜகம் போன்றவை ஆகும்.
அரசியல்வாதிகளிடம் பம்மும் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் அராஜகமாக நடந்துகொள்வார்கள். இதனால் பல முறை மோதல் நடந்துள்ளது. சுங்கக்கட்டணத்தை கட்டாயமாக வசூலிக்கும் அரசு சாலைகளை மோசமாக பராபரிப்பதால் விபத்துகள் அதிகம் நடக்கிறது.
இதுவும் சுங்கச்சாவடிகள் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு சரக்கு லாரி இந்தியாவில் ஒருநாள் பயணம் செய்தால் அதற்காக ரூ.20 ஆயிரம் வரை சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை வாடிக்கையாளர் வாடகையில் தான் சேர்க்கிறோம் இதனால் சரக்கு கட்டணம் உயர்கிறது. அனைத்தும் சரக்குகள் விலை உயர காரணமாக அமைகிறது என்பது அவர்கள் வாதம்.
தற்போது பொது விவகாரத்தில் போராடி வரும் மாணவர்கள் போராட்டம் பல வடிவங்களை எடுத்து வருகிறது. அடுத்தக்கட்டமாக சுங்கச்சாவடிகளை நோக்கி போராட்டம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுங்க கட்டணங்களை செலுத்த மாட்டோம் என்ற கோஷத்தை முன்வைக்க உள்ளதாகவும் இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று கூறப்படுகிறது.