இலங்கை மக்களுக்கு உதவும் விவகாரம்... மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை கடிதம்!!
தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த 29ம் தேதி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடித்ததில், தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு அனுப்பி வைக்க உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு அனுப்ப உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறையிடம் வழங்கும் படி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.