ஏசு இருக்கவேண்டிய இடத்தில் மகாலட்சுமி எப்படி வந்தார்..?? கொந்தளிக்கும் எச்.ராஜா...
முதலில் ஜோதிகா இப்போது சூர்யா என வரிசையாக இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் எச்.ராஜா.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலுார், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. வேறு எதுவும் நடக்கவில்லை. அரசாங்கம் செயல்பட ஆரம்பிக்கவில்லை. மக்கள் பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார்.
ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது. வள்ளுவர் கோட்டம் கூட நீர்நிலையை மூடி தான் கட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்கும், ஆகமத்திற்கும் இந்த ஆட்சியில் துளியளவு மரியாதை கிடையாது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு மூலம் ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும். கோயில்களில் தங்கம் எடுக்கும் வேலையும் நீதிமன்ற உத்தரவால் தடுக்கப்பட்டுள்ளது. கோயில் வழிபாடுகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிடக்கூடாது. கோவை பள்ளி மாணவி சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும். குற்றத்துக்கு காரணமானவர் எந்த மதமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரின் கொளத்துார் தொகுதி தற்போது குளத்து ஊராக மாறி வீடுகள் மிதக்கின்றன. தி.மு.க., அரசு முழு அளவில் தோல்வி அடைந்து விட்டது. ஹிந்துக்களை சினிமா துறையும் கொச்சை படுத்துகிறது. ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு, சந்துரு பெயர்கள் அப்படியே இருக்கும்போது அந்தோணிசாமி பெயர் மட்டும் குருமூர்த்தி என மாற்றப்பட்டது ஏன்? . படத்தில் வைக்கப்பட்டுள்ள மகாலட்சுமி காலண்டர் மாற்றப்பட வேண்டும். நடிகர் சூர்யாவின் மனைவி ஹிந்துக்களை கோயிலுக்கு போகாதீர்கள் என இழிவாக பேசியவர். ஏசு இருக்கவேண்டிய இடத்தில் மகாலட்சுமி எப்படி வந்தார் ? என்று கண்டனம் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.