விட மாட்டேன்றாங்க... வரிந்து கட்டும் தீபா...! தாங்குமா ஆர்.கே.நகர்..?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து காலியானதால், இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வெள்ளிக்கிழமை இன்று ஒரே நாளில் திமுக., அதிமுக.,வேட்பாளர்கள் மற்றும் டிவிடி தினகரன் என முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
திமுக., சார்பில் மருது கணேஷும், அதிமுக.,வின் சார்பில் மதுசூதனனும் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபடி, டிடிவி தினகரனும் கறுப்பு வெள்ளை சிவப்புடன் கூடிய கொடிகள் கட்டிய வண்டிகளில் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதனிடையே, ஜெயலலிதாவின் வாரிசு என்று சொந்தம் கொண்டாடும் ஜெ.தீபா, அதிமுக.,வுக்கும் சொந்தம் கொண்டாடிப் பார்த்தார். இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற போது, தன் சார்பில் சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார் தீபா. ஆனால், கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவர், அதிமுக.,வுக்கு சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்று தீபாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது தேர்தல் ஆணையம்.
முன்னதாக, அதிமுக.,வுக்காக மன்றாடிப் பார்த்தவர், தன் பெயரையும் சேர்த்து ஒர் பேரவை அமைத்தார். கட்சியும் கண்டார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அது கலகலத்து விட்டது. இடையில் கணவர் மாதவன் தனி டிராக்கில் செல்ல, கணக்கு தடம் மாறி இருவருக்கும் இடையில் பிணக்கு மூண்டது. நாட்டு நிலவரம் கருதி, தனியாக போணியாகாது என்று மீண்டும் இருவரும் ஒன்றிணைந்தனர். இப்போது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி விட்டார் ஜெ.தீபா.
அரசியலில் அடியெடுத்து வைக்கும் விதமாக, இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிறது. எனவே, தனது அத்தையின் இடத்தைத் தான் பிடிக்க போட்டி போடுகிறார் தீபா. தான், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வரும் 4ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெ.தீபா.
மேலும், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயலலிதாவின் மகள்? என்ற விஷயத்தை முன்வைத்து, ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் வாரிசு, அரசியல் வாரிசு தானே என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அமிர்தா என்ற பெண், தானே ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது, தீபாவுக்கு பெரும் ஏமாற்றம்தான். அதனால், அடுத்த ஒரு கருத்தையும் இப்படி தெரிவித்திருக்கிறார்...
ஜெயலலிதாவுக்கு மகள் என யாரும் கிடையாது; அம்ருதாவை யாரோ இயக்குகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெ.தீபா.