செங்கோட்டையில் தேசியகொடி அவமதிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது..பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேதனை.
கொரோனா பெருந்தொற்று, மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது.
![It is unfortunate that the national flag was insulted at the Red Fort. Presidential anguish at joint parliamentary session. It is unfortunate that the national flag was insulted at the Red Fort. Presidential anguish at joint parliamentary session.](https://static-gi.asianetnews.com/images/01ex6gc0x6vvqvhfy8tybh39q6/ramnath-jpg_363x203xt.jpg)
கொரோனா பெருந்தொற்று, மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது.
ஜனாதிபதி உரையுடன் தொடங்கியுள்ள இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி நிறைவடைகிறது. பின்னர் அதன் மீதான விவாதம் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நீடிக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டின் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இதை அமைய வேண்டும் என்பதே அந்த சவால் ஆகும்.
கொரோனா தொற்று எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ப்டஜெட் அமையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. மக்களவை மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஜனவரி 26 ஆம் தேதி செங்கோட்டையில் மூவர்ண கொடி அவமதிக்கப்பட்ட துரதிஷ்டவசமானது. எந்தச் சூழ்நிலையிலும் சட்டங்களும் விதிகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும். கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு சில அரசியில் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. சில அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பும் இருக்கிறது. இந்த சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசாங்கம் பின்பற்றும் என்று நம்புகிறேன்.
இந்த சட்டம் தொடர்பாக அரசின் பிரச்சாரம் இந்திய விவசாயத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்துவதன் மூலம் எம்.எஸ்.பி ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. கொள்முதல் மையங்களும் அதிகரித்திருக்கிறது. பழைய நீர்ப்பாசன திட்டங்களுடன் நவீன நீர்ப்பாசன தொழில்நுட்பமும் விவசாயிகளை சென்றடைந்துள்ளது. மைக்ரோ பாசனம் மூலம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்துள்ளது. ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையேயான இடைவெளியை அரசு வெகுவாக குறைந்துள்ளது. காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடும் போது நாடு சுத்தமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசின் கொள்கைகள் விவசாயிகளின் கடும் உழைப்பு காரணமாக உணவு தானிய உற்பத்தி 27.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் மருத்துவ சேவை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறினார்.