அதிகாலையில் அவசரமாக டெல்லி பறந்த அமைச்சர் குழு...! - அழைப்பு விடுத்ததா பாஜக?
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று அதிகாலை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் குழு அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எதிரெதிர் அணிகளாக இருந்த பன்னீர் அணியும் எடப்பாடியும் ஒட்டிக்கொண்டது. ஆனால் எடப்பாடியுடன் பிண்ணி பிணைந்திருந்த டிடிவி தினகரன் தரப்பு தற்போது ஆதரவற்று தனியாக காய் நகர்த்தி வருகிறது.
காரணம் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவது என்ற எடப்பாடியின் முடிவே ஆகும். ஆனால் ஏற்றிவிட்ட ஏணிக்கு துரோகம் செய்த எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கள் என டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் போக, அவரோ என்னால் எதுவும் செய்ய முடியாது என கையை விரித்து விட்டார்.
இதனிடையே கேப்பில் கிடா வெட்டுவது போல், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளுநரை வலியுறுத்திய கையோடு தற்போது டெல்லிக்கு போர்கொடியுடன் சென்றுள்ளனர்.
மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருக்கிறது என்று அதிமுகவில் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தற்போது மத்திய அரசிடம் சென்று முறையிட படையெடுக்கின்றனர்.
இதனால் திணறும் மத்திய அரசோ மாநில அரசுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. திடீரென நேற்று இரவு 9 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதைதொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு செங்கோட்டையன் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் குழு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.