உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவது சந்தேகம்தான்... செல்லூர் ராஜூ ரகிட ரகிட.!
உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதிமுக வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறோம். அதிமுக ஆட்சி மதுரைக்கு நிறைய தந்துள்ளது. அந்தத் திட்டங்கள் எல்லாம் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அதனால், உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் அதிமுகவுக்கு மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கிடைப்பார்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துதான் திமுக ஆட்சி அமைந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தபிறகு பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மகளிருக்கு ரூ.1,000 நிதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்பட எந்த வாக்குறுதியையும் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. இதேபோல அங்கன்வாடி, சத்துணவு, கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசியை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்த மிக விரைவான நடவடிக்கை தேவை” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.