மத அரசியலுக்கும் ரஜனியின் ஆன்மீக அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழருவி மணியன் அதிரடி.
கட்சி ஆரம்பித்த பிறகே, கூட்டணி குறித்தெல்லாம் ரஜினி முடிவு செய்வார். திமுக மற்றும் அதிமுகவின் தவறுகளை பேசி அரசியல் செய்ய ரஜினி விரும்பவில்லை.
மகாத்மா காந்திக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தான் ஆன்மீக அரசியல் பேசுகிறார் எனவும், ரஜினியை பற்றி தெரியாத போது அவரை தான் கடுமையாக விமர்சித்த தாகவும், தற்போது தன்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தையே ரஜினி ஆரம்பிக்கும் காட்சியோடு இணைக்கப் போவதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியின் பெயர், சின்னம் குறித்து ஆலோசனை நடைபெற்று இருக்கிறது, அடிப்படை கட்டுமானம் குறித்து ஆலோசனை நடைபெற்றது, கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை, ரஜினி கட்சி தொடங்கிய பின் பெருந்திரளாக மக்கள் அவர் பின்னால் திரள்வார்கள். அதனால் மிகப்பெரிய எழுச்சி ஏற்படும், கூட்டணி அமைப்பது குறித்து ரஜினியே முடிவு செய்வார்,அதேபோல், ரஜனி அரசியலுக்கு வருவதனால் எங்களுக்கு பயமில்லை என கட்சிகள் கூறும் போதே அவர்கள் எங்கள் அறிவிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையாகிறது. கட்சி ஆரம்பித்த பிறகே, கூட்டணி குறித்தெல்லாம் ரஜினி முடிவு செய்வார். திமுக மற்றும் அதிமுகவின் தவறுகளை பேசி அரசியல் செய்ய ரஜினி விரும்பவில்லை.
ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது எதிர்மறை அரசியல் அல்ல, ரஜினி தற்போது செய்யப்போவது நேர்மறை அரசியல். தான் மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை கூறியே ரஜினி அரசியல் செய்வார். அனைத்து மக்களையும் அன்பால் அரவணைத்து ஆர தழுவுவதே ஆன்மீக அரசியல். இந்த அரசியல் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, எந்த மதத்திற்கும் எதிரானதும் அல்ல. மத அரசியலுக்கும் ஆன்மீக அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முதன் முதலில் மகாத்மா காந்தி தான் ஆன்மீக அரசியல் குறித்து பேசினார். அதை தற்போது ரஜினி பேசுகிறார். தமிழகத்தில் கடந்த காலங்களைப் பற்றி பேசினால் யாராலும் தமிழகத்தில் அரசியல் செய்யவே முடியாது. எம்ஜிஆர் அரசியல் கட்சி துவங்கிய போது அவருக்கு துணையாக இருந்தவர்கள் ரஜினிக்கு துணையாக வருவார்கள். இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.