போட்டி பலமாகிவ்விட்டதே! இரட்டை இலை ஒன்றே போதுமா? என்ன செய்யப் போகிறார் மதுசூதனன்?
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக., சார்பில் போட்டியிடுகிறார் மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சர் மதுசூதனன். இவர் வேட்பாளராக இருந்து ஆர்.கே.நகரில் பலத்த போட்டியை சந்திக்கிறார். ஆனால், அதற்கு முன்னர், கட்சிக்குள்ளேயே வேட்பாளராக அறிவிக்கப் படுவதற்கே பலத்த போட்டியை எதிர்கொண்டார்.
ஒரு இடைத்தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்ய, விருப்ப மனு பெற்று இறுதி செய்தது எல்லாம் கடுமையான உட்கட்சிக் குழப்பங்களின் வெளிப்பாடுதான். இப்படி கட்சிக்குள் நடந்த குழப்பங்கள் இதுவரை அ.தி.மு.க.,வில் நடக்காதது எனலாம்.
ஓபிஎஸ்., ஆதரவாளரான மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது தெரிந்தே, அவருக்கு எதிராக விருப்ப மனுக்களைக் கொடுக்க வைத்தனர் சில அமைச்சர்கள். ஆட்சி மன்றக் குழுவிலேயே கடும் எதிர்ப்பு.
இந்த நிலையில், கட்சிக்குள் மீண்டும் ஒரு பிளவு வந்து விடும் என்பதை உணர்ந்தார் எடப்பாடியார். மதுசூதனனையே வேட்பாளராக இறுதி செய்ய சம்மதித்தார். இதனால் தான் அந்த அணியின் வா.மைத்ரேயன் எம்.பி., இரு தினங்களுக்கு முன்னர், தங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டதாக ஒரு பிட்டைப் போட்டார்.
இப்படி வேட்பாளர் ஆவதற்கே திக்கித் திணறி ஒருவழியாக வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார் மதுசூதனன். இவருக்கு இருக்கும் பலம் என்று சொன்னால் ஒன்றே ஒன்றுதான். அது இரட்டை இலைச்சின்னம்!
ஆனால், இந்த இரட்டை இலைச் சின்னம் ஒன்றே அவரது வெற்றியை உறுதி செய்யுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. காரணம், ப்படியாவது இவரைத் தோற்கடிக்கச் செய்ய வேண்டுமென்று களம் இறங்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.
போதாகுறைக்கு, சொந்தக் கட்சியினரே அவரை பயமுறுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். எனவே அவர்களை அனுசரித்துச் செல்லுமாறு கூறப்பட்ட அறிவுரையை ஏற்க மறுத்துவிட்டாராம் மதுசூதனன்.
அப்படிப்பட்ட கட்சிக்காரர்களை நம்பி அதிமுக.,வோ, நானோ இல்லை. இரட்டை இலையும் அரசும் நம் கையில் இருக்கிறது. இங்கு அதிமுக.,வுக்கும் இரட்டை இலைக்கும்தான் ஓட்டே தவிர, எனக்கே கிடையாது. அப்படி இருக்கும்போது, அவர்கள் தினகரனுக்காக ஓட்டு சேகரிக்கச் சென்றாலும், நாம் கவலைப்பட வேண்டாம். நாம் நம் வேலையை பார்ப்போம் என அலட்சியமாகச் சொல்லி விட்டாராம் மதுசூதனன்.
இரட்டை இலைச் சின்னத்தின் மீது அவருக்கு இருக்கும் அபார நம்பிக்கையைப் போல் தான் திமுக.,வுக்கும் இருக்கிறது போலும்! அதனால்தான் போட்டியை குறைக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை திமுக., மேற்கொண்டது. இரட்டை இலைக்கு எதிராக பலம் வாய்ந்த அணியாகத் திரட்டும் வேலையில் ஈடுபட்டது.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் 5 முனை, 6 முனைப் போட்டியெல்லாம் வரப் போகிறது. அதற்குக் காரணம், இப்போது பாஜக., சார்பில் அதன் வேட்பாளர் கரு.நாகராஜன் அறிவிக்கப் பட்டிருக்கிறார்.
மேலும், நடிகர் விஷால் தானே சுயேட்சையாகப் போட்டியிடப் போகிறார். அதனை அவர் அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறாராம். இதனால் இப்போது களத்தில் போட்டி அதிகரித்திருக்கிறது.
விஷால் போட்டியிடுவதால், எங்களுக்கு பாதிப்பில்லை என்கிறார் செல்லூர் ராஜூ. ராஜேந்திர பாலாஜியும் அதையே சொல்கிறார். இப்படி அமைச்சர்கள் உறுதி கூறுகிறார்கள். இருப்பினும் இந்தப் போட்டியில் இரட்டை இலை மட்டுமே மதுசூதனனுக்குக் கை கொடுக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்!