இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக - அதிமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே கட்சி அலுவலகங்கள கலை கட்ட ஆரம்பித்துவிட்டன. அந்த அளவுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகத்திலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். விருப்பமனு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் நேர்காணல், ஆலோசனை என தினமும் ஏதாவது நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது இருப்பை அரசியல் கட்சிகள் காட்டி வருகிறது. இதனால் கல்யாண வீடு போல கட்சி அலுவலகங்கள் கலகலப்பாக காட்சியளிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியில் பாமக, பாஜக நீடிப்பது உறுதியாகியுள்ளது. பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்படிக்கையும் கையெழுத்தாகிவிட்டது. ஆனால் அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. பாமகவிற்கு ஒதுக்கிய அளவிற்கு எங்களுக்கும் சீட் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறது தேமுதிக. ஆனால் எடப்பாடியாரோ தேமுதிகவின் வாக்கு வங்கியை சுட்டிக்காட்டி 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளாராம். 

இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக - அதிமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இறுதியாக 20 தொகுதிகளையாவது ஒதுக்க கோரி தேமுதிக சார்பில் தொகுதி பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாம். அதன்படி ஆலந்தூர், விருகம்பாக்கம், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, விருதுநகர், மதுரை மத்தி, மேட்டூர், மயிலாடுதுறை, பண்ருட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.