கெஞ்சம்கூட திருப்தி அடையாத ஸ்டாலின்..?? இதெல்லாம் பத்தாது.. மேடையிலேயே பேராசையை வெளிபடுத்திய முதல்வர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டமும் அவசியம். நான் மாணவனாக இருந்தபோது இருந்தது போல் இல்லாமல் , இப்போது கட்டுப்பாட்டுடன் மாணவர்கள் இதுபோன்ற கல்லூரி நிகழ்வுகளில் அமர்ந்துள்ளீர் என்று கூறினார்.
அயல்நாடுகளில் உள்ள சிறந்த படிப்புகளை தமிழக கல்லூரிகளில் அறிமுகம் செய்வது அவசியம் என்றும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டமும் அவசியம் என முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ஆசையை வெளிபடுத்தியுள்ளார். தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ' சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம்' எனும்பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய உபகரணங்களை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாற்றுத்திற னாளிகளுக்கு மேற்கூரையுடன் கூடிய சக்கர நாற்காலி , வழியில் தடை இருந்தால் ஓசை எழுப்பும் கோல்கள், ஒலி வடிவை வரி வடிவமாக மாற்றும் மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கிய பொறியியல் மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக 5ஆயிரம் ரூபாயுடன் , பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார். அமைச்சர்கள் பொன்முடி , மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் , மாணவர்கள் பலர் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதுடன் , நிகழ்வின் நிறைவில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் நடந்து சென்றபோது கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சர் பேச்சு
பெரும்பான்மையானவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் கோடகநல்லூர் சுந்தரராஜன் உருவாக்கிய கல்லூரி இது. பொறியியல் பயில மாணவர்களுக்கு இடராக இருந்த நுழைவுத் தேர்வை கருணாநிதி நீக்கியதால் தமிழகத்தில் இன்று அனைத்து வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கின்றனர். ஏழை , கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற தடையாக உள்ள நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துகிறோம். மாணவர்கள் நாட்டின் மிகப்பெரும் சொத்து. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் 100 ல், 30 க்கும் மேற்பட்டவை தமிழகத்தை சார்ந்தவை. தமிழக கல்லூரிகளில் ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். வெளிநாட்டின் சிறந்த படிப்பு , பட்டங்களை தமிழகத்திலும் அறிமுகம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் பருவத்திலேயே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் உதவும். கருணாநிதி , மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பை பார்த்திருந்தால் வாழ்த்தி இருப்பார். கருணாநிதிதான் நாட்டில் முதன்முறை மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை உருவாக்கினார் , மாற்றுத்திறனாளிகள் துறையை கருணாநிதி போல, நானும் எனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டமும் அவசியம். நான் மாணவனாக இருந்தபோது இருந்தது போல் இல்லாமல் , இப்போது கட்டுப்பாட்டுடன் மாணவர்கள் இதுபோன்ற கல்லூரி நிகழ்வுகளில் அமர்ந்துள்ளீர் "என்று கூறினார்.
முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, சமூக மேம்பாடு எனும் பெயரிலான திட்டங்களில் தலைமை ஏற்க தகுதி வாய்ந்த ஒரே நபர் ஸ்டாலின்தான். அதனால்தான் சமூக நீதிக்காக இந்தியாவில் ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறார். உயர் கல்வி படிக்கும்போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சியும் அளிக்க வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி , ஊராட்சி அனைத்தும் முதல்வருக்கு ஆதரவாக இருப்பது போல , உயர் கல்வி பயிலும் மாணவர்களும் முதலமைச்சருக்கு ஆதரவாக இருந்தால்தான் கல்வித்துறைக்கே பெருமை.