அதிமுகவில் ஒற்றை தலைமையா ஓபிஎஸ் இருக்க வேண்டும், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓபிஎஸ் என்றெல்லாம் சென்னையின் பிரதான சாலைகளில் பெரிய போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் தொண்டர்கல் அமைதி காக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அக்கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவது வழக்கம். ஆனால், பிறகு அந்த சலசலப்புகள் அப்படியே அடங்கிவிடும். ஆனால், அண்மைக் காலமாக அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றும் பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் பாஜக - அதிமுகவினர் இடையே கருத்து பகிர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் சசிகலா, நான் அதிமுக தலைமையை ஏற்பேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பது குறித்து குரல் எழுப்பினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், யார் தலைமை என்பது பற்றி ஆலோசிக்கவில்லை’ என்று ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயக்குமாரின் இந்தக் கருத்துக்குப் பிறகு ஒற்றை தலைமை பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமையா ஓபிஎஸ் இருக்க வேண்டும், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓபிஎஸ் என்றெல்லாம் சென்னையின் பிரதான சாலைகளில் பெரிய போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் தொண்டர்கள் அமைதிக் காக்கும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று பதிவில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
