டிடிவியை எம்எல்ஏக்கள் சந்திப்பது அவர்களின் விருப்பம் - அமைச்சர் சி.வி.சண்முகம்
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த 2 மாதமாக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையில், டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 4 நாட்களுக்கு முன் டிடிவி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது, அதிமுகவை தானே வழி நடத்தப்போவதாக தெரிவித்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக அவரை சந்தித்து வருகின்றனர். இதனால், எடப்பாடி அணியினர் கடும் பயத்தில் உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், அமைச்சர் ஜெயகுமார், டிடிவி.தினகரன் எந்த பொறுப்பிலும் இல்லை என கூறினார். இதற்கு, நாஞ்சில் சம்பத் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தங்களது அணியால் எடப்பாடியின் ஆட்சி கவிழாது என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சி கவிழாது என கூறிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதன்மூலம் இரு அணியும் இணைவதற்கான பேச்சு விரைவில் தொடங்கும் என்றார்.
எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனை சந்திப்பது, அவர்களது விருப்பம். அதை யாரும் தடுக்கவில்லை. அமைச்சர்கள் அனைவரும் ஒரு மித்த கருத்தில் இருக்கிறோம் எனவும் கூறினார்.