பெரியார் சிலைகளை அவமதித்தால் தப்பு? அப்போ இந்து கடவுள்களை அவமரியாதை செய்யலாமா? வீரமணியை டரியலாக்கிய BJP
ஹிந்து கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசியதோடு, கடவுளர்களின் சிலைகளுக்கு செருப்பு மாலையிட்டு, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கலாச்சார சீர்கேட்டை தமிழகத்தில் பரவ விட்டது யார்? குறிப்பிட்ட ஒரு சாதியை படு கேவலமாக விமர்சனம் செய்து, அந்த சமுதாயத்தினரின் உணர்வுகளை, பழக்க வழக்கங்களை கேலி செய்து, கொச்சைப்படுத்தி, பெண்களின் தாலியை அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற வன்முறை வன்முறைகளை அரங்கேற்றம் செய்து வெறுப்பு விதையை விதைத்தது யார்?
கோவையில் நேற்று ஈவெரா அவர்களின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை, மணியம்மையார் சிலை ஆகியவை சேதப்படுத்தப்படுவதும் அவமதிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் கும்மிடிப்பூண்டியில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மையார் சிலையும் அவமதிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று அதிகாலை கோவை அருகே வெள்ளலூரில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் பகுதியில் உள்ள திராவிடர் கழகத்தின் படிப்பகம் முன்பாக பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து, காவி நிற பொடியை வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள வீரமணிக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கோவையில் நேற்று, ஈவெரா அவர்களின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று கொள்கைகளை கொண்டவர்களை மனம் மாற்றி தங்களின் கொள்கைகளுக்கு ஈர்ப்பதே கொள்கைவாதிகளின் நோக்கமாக, எண்ணமாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சமூக நல்லிணக்கத்தை சீர் கெடுக்க ஈவெரா அவர்களுக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்கள் இந்த செயலை செய்திருந்தாலும் அல்லது சில இடங்களில் நடந்தது போல், அதே காரணத்திற்காக ஈவெரா அவர்களின் கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களே இதை செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. வெறுப்பு அரசியலால் சமுதாயத்திற்கு கேடே விளையும். ஆனால், இந்த வெறுப்பு அரசியலை விதைத்தது யார்? எந்த சித்தாந்தம்? என்ற கேள்விகளும் எழத்தான் செய்யும். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை தகர்க்கும் வகையில் ஹிந்து கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசியதோடு, கடவுளர்களின் சிலைகளுக்கு செருப்பு மாலையிட்டு, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கலாச்சார சீர்கேட்டை தமிழகத்தில் பரவ விட்டது யார்? குறிப்பிட்ட ஒரு சாதியை படு கேவலமாக விமர்சனம் செய்து, அந்த சமுதாயத்தினரின் உணர்வுகளை, பழக்க வழக்கங்களை கேலி செய்து, கொச்சைப்படுத்தி, பெண்களின் தாலியை அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற வன்முறை வன்முறைகளை அரங்கேற்றம் செய்து வெறுப்பு விதையை விதைத்தது யார்? என்ற கேள்விகளும் உறுதியாக எழும்.
எவ்வளவு வெறுப்பை விதைத்த போதிலும், கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது கடவுள் பக்தி, ஆன்மிகம், மத நம்பிக்கைகள் அதிகரித்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈவெரா அவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவது தவறென்றால், கடவுள்களை, ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதும் தவறே, குற்றமே.
ஆனாலும், நாகரீக சமுதாயத்தில், கெட்டன மறந்து, நல்லவற்றை நினைத்து சமதர்ம, நல்லிணக்க சமுதாயத்தை நோக்கி நடைபோடுவதே சாலச்சிறந்தது. நாம் அனைவருமே அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொண்டு, வன்முறையை தூண்டும் வகையிலோ, சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலோ யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பே என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.