டி.டி.வி.தினகரன் ஆட்களுக்கு அதிமுகவில் பொறுப்பா..? கொட்டும் மழையில் கொதித்த ரத்தத்தின் ரத்தங்கள்..!
கூடலூர் பகுதியில் அமமுக கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் பகுதியில் அமமுக கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் அமமுக கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியதை கண்டித்து கொட்டும் மழையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விமல் தலைமையிலான மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அதிமுகவிற்கு புதியதாக சேர்ந்தவர்களுக்கு, தற்சமயம் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு வழங்கியதை கண்டித்தும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்து, கட்சிக்காக பணியாற்றிய தொண்டர்களை இவர்கள் புறக்கணித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். கொட்டும் மழையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பழைய பஸ் நிலையம் சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை மாற்றும் வரை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். உதகைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என போராட்டத்தின்போது கோஷங்களை எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.