வெ. இறையன்பு, உதயச்சந்திரன் நியமனங்கள்... மு.க. ஸ்டாலின் அரசுக்கு சபாஷ் போட்ட சீமான்..!
தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு, முதல்வரின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவருடைய தனிச் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் செயலாளராக உமாநாத், மூன்றாம் செயலாளராக எம்.எஸ்.சண்முகம், நான்காம் செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோரும் உடனடியாக நியமிக்கப்பட்டனர். மேலும் தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக ராஜீவ் ரஞ்சனுக்கு பதில் வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனங்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.