பணம் கேட்டு மிரட்டல்... எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் பரபரப்பு புகார்..!
தன்னையும், தன் தம்பியுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மானத்தை வாங்கி விடுவதாக திருவேங்கடம் மிரட்டுகிறார்.
அதிமுக பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசன் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்
கோவை மாவட்டம் கோவைப்புதூரை சேர்ந்தவர் எஸ்.பி. அன்பரசன். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணான இவர். இன்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் தீபக் தமோரை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், திருவேங்கடம் என்பவர் தனது தொழில் நொடித்துவிட்டதாகவும், மனைவியின் நகைகள், சொத்து என அனைத்தும் தொழிலுக்காக அடமானம் வைத்து நஷ்டம் அடைந்து விட்டதாகவும், 5 லட்ச ரூபாய் கொடுத்தால் நகைக்கு வட்டி கட்டி ஏலத்தை தவிர்த்து விடுவதாக கூறி தன்னிடம் கெஞ்சியதாக மனுவில் கூறியுள்ள அன்பரசன்.
தெரிந்தவர் என்ற அடிப்படையில் தனது சொந்த ஜாமினில் தெரிந்த நண்பர் மூலம் திருவேங்கடத்திற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்த நிலையில், தற்போது ரூபாய் ஒன்றரை கோடி கொடுக்க மிரட்டுவதாகவும், அதனால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னையும், தன் தம்பியுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மானத்தை வாங்கி விடுவதாக திருவேங்கடம் மிரட்டுகிறார். மேலும், இவருடைய பணத்தாசையால் என் உயிருக்கும் என் குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து வருமோ? என்று அஞ்சுகிறேன் எனவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டும். உண்மைக்கு புறம்பாக அவதூறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருவேங்கடம் , அரசு ஒப்பந்தப் பணிகள் தருவதாக கூறி ரூபாய் 1.20 கோடி வாங்கி மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.