உள்ளாட்சி தேர்தல் முடிவு எப்படி இருக்கும் ? முதல்வருக்கு உளவுத்துறை கொடுத்த 'ஷாக்' ரிப்போர்ட் !!
தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,489 பேரூராட்சிகளில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே, 218 வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு பெற்ற நிலையில், மீதமுள்ள வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தல் ஆளுங்கட்சியான திமுகவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ‘கொங்கு’ மண்டலத்தை கைப்பற்ற வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு. 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தாலும் கொங்கு மண்டலம் பெரும் அதிர்ச்சி அளித்தது.
இந்த மண்டலத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவே முழு வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோதிலும், முதலமைச்சராகும் ராசியே இல்லை என சொன்னவர்களுக்கு மத்தியில் ஸ்டாலின் வென்று காட்டினாலும் ஒரேயொரு குறை மட்டும் திமுகவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் மேற்கே உதயசூரியன் உதிக்காமல் இருப்பதே காரணம்.
அதனை சரிகட்டவே அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின். எஸ்.பி வேலுமணி கோட்டையை சரிக்கட்ட இவர்தான் சரியான ஆளாக இருப்பார் என்பதே இதற்கு முக்கிய காரணம். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் ஒன்றினை உளவுத்துறை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், ஒட்டுமொத்தமாக 80 சதவீத வெற்றி திமுகவிற்கு கிடைக்கும் என்றும், மீதமுள்ள 20 சதவீதமானது எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுவும் கொங்கு மண்டலத்திலும், தென் மண்டலத்திலும் தான் திமுக பின்னடைவை சந்திக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனால் முதல்வர் ஸ்டாலினை அப்செட்டில் இருப்பதாகவும், உடனே சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு போன் அடித்து வெளுத்து வாங்கிவிட்டாராம். தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக இருக்கும் என்று பொறுப்பாளர்கள் கூற, தேர்தல் முடிவு வரட்டும் என்று சொல்லிவிட்டார் முதல்வர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.