இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் இதுதான் வித்தியாசம்!!
பாகிஸ்தானை எதிரியாக நினைப்பதை இந்தியா நிறுத்திவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அப்படியில்லை. இந்தியாவை எதிரியாகவே நினைக்கிறது. அதுதான் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பாகவத், இந்தியா இந்துக்களுக்கான நாடு. பாகிஸ்தானை எதிரியாக நினைப்பதை இந்தியா நிறுத்திவிட்டது. ஆனால் இந்தியாவை பாகிஸ்தான் எதிரியாகவே பார்க்கிறது. இதுதான் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம்.
பண்டைய நாகரீகங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரீகங்கள் இந்தியாவின் நாகரீங்கள், கலாச்சாரங்கள் ஆகும். ஆனால் ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. அவை இந்திய நாகரீங்கள் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் தனி நாடு. அதேபோல், வங்க மொழியை பேசினாலும் வங்கதேசம் தனி நாடாக உள்ளது. அவர்களும் இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. பன்முகத்தன்மையை இந்துத்துவா ஏற்கிறது. ஆனால் பிரிவினையை ஏற்கவில்லை. எனவே இந்தியா என்பது இந்துக்களுக்கான நாடு என மோகன் பாகவத் பேசினார்.