அடுத்த இருபது முதல் முப்பது ஆண்டுகளுக்கு பாஜகவை சுற்றியே இந்திய அரசியல் சுழலுமென  அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர். 

அடுத்த இருபது முதல் முப்பது ஆண்டுகளுக்கு பாஜகவை சுற்றியே இந்திய அரசியல் சுழலுமென அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

நாடு முழுவதும் பிரபலமான அனைவராலும் அறியப்பட்ட தேர்தல் வியூகராக இருந்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அரசியலில் ஆலோசகரானகவும் செயல்பட்டார். பிரதமர் மோடி தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை பலருக்கும் அரசியலில் வியூகராக இருந்து வந்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வழங்க போகிறார்,காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற பேச்சு பரபரத்தன. 

திடீரென அதிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார். பின்னர் அவர் தனியாக அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கேற்றபடி அவரும் மக்களிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பலவீனமாக உள்ள நிலையில் மாநிலக் கட்சிகள் ஒன்றுகூடி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் அரசியல் பிரவேசம் என்ற தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இப்போதைக்கு கட்சி தொடங்குவதற்கான எண்ணம் இல்லை என்றும் பூஜ்ஜியத்தில் இருந்து நான் தொடங்க விரும்புகிறேன் என்றும், ஒருவேளை எதிர்காலத்தில் கட்சி தொடங்கலாம் என்றும் பதிலளித்துள்ளார். இதன் மூலம் தற்போதைக்கு அரசியலில் பிரவேசம் இல்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிலவரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த பேட்டியில் இந்திய அளவில் நீங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று விட்டால் உங்களை யாராலும் விரட்டியடிக்க முடியாது, இது ஒன்றும் தானாக நிகழ்ந்து விடாது என கூறியுள்ள அவர் வருங்காலத்தில் பாஜக வலிமை மிகுந்த தேர்தல் சக்தியாக இருக்கும் என கூறியுள்ளார். எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகாவே வெற்றி பெறுவார்கள் என்று அர்த்தமல்ல, கடந்த 40- 50 ஆண்டுகள் என்பது எப்படி காங்கிரஸ் கட்சியை சுற்றியே இருந்ததோ, நாம் அல்லது நமது குடும்பத்தில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து இருப்போம் அல்லது எதிர்த்திருப்போம் அதுபோல அடுத்துவரும் 20-30 ஆண்டுகள் இந்திய அரசியல் என்பது பாஜகவை சுற்றியே சூழலும் என அவர் கூறியுள்ளார்.

பாஜகவை ஒன்று நாம் எதிர்ப்போம் அல்லது ஆதரிப்போம் என்ற நிலையே இருக்கும், அதற்காக பாஜக மட்டும்தான் தனித்து இருக்கும் என்று நினைப்பது தவறு, பாஜக இருப்பதால் எதிர்க்கட்சிகளும் இருக்கும், எதிர்க்கட்சிகள் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் கையிலெடுக்க வேண்டும். இந்த ஜனநாயகத்தின் விடாமுயற்சி என்பது அவரசியம் இது எப்போதும் நல்ல பலனைக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.