ராம் மோகன ராவின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது - எதிர்கட்சிகள் ஏன் மவுனம் இந்திய தேசிய லீக் கேள்வி
ராம் மோகன் ராவ் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் இந்த ரெய்டு என்று குற்றம் சாட்டுவதை கணக்கில் கொள்ளவேண்டும், மாநில உரிமைகள் பாதிப்பதை ஏன் எதிர்கட்சிகள் கண்டிக்காமல் மவுனம் காக்கின்றன என்று இந்திய தேசிய லீக் தலைவர் தடா றஹீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை:
முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மத்திய , மாநில அரசுகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில், நிறைய உண்மைகள் மறைந்துள்ளதை யாராலும் மறைக்க முடியாது என்பதே இந்திய தேசிய லீக் கட்சியின் கருத்து .
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என ராம் மோகன் ராவ் கூறியது சந்தேகத்தை உறுதி படுத்தி உள்ளது .எந்த அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போ திமுக போன்ற எதிர்கட்சிகளின் ஆதரவு கூட இல்லாத நிலையில் மத்திய அரசு மீது ராம் மோகன் ராவ் கூறிய குற்றச்சாட்டை புறந்தள்ள முடியாது .
மாநில அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்துள்ள முன்னாள் தலைமை செயலாளர் அவர்களின் கண்டனம் இந்திய தேசிய லீக் கட்சி வரவேற்கிறது .
தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தலைமை செயலகத்திற்கு துணை ராணும் சென்றது அங்கு வருமானவரிதுறை சோதனை நடத்தியது உட்பட மத்திய அரசின் அனைத்து மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளையும் இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் மிக பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காதது இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது .
ராம் மோகன் ராவ் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது முதற்கொண்டு மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய பி.ஜே.பி அரசு தலையிடுவதை தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து தடுக்க வேண்டும் என்பதே இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கை .
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.