இந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதி பினாக்கி சந்திரா கோஸ்…. குடியரசுத் தலைவர் ஒப்புதல் !!
உயர்பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்பின் முதல் நிதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரசனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
இவரது கோரிக்கையை ஏற்று நாட்டில் முதன்முறையாக மத்தியில் லோக்பால் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான நீதிபதி பினாக்கி சந்திரா கோஸ் பெயர் இந்த பதவிக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். அவருடன் மேலும் 9 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் ஐபி கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.