கொரோனா வைரஸின் வீரியம் திடீரென அதிகரிப்பு... அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் தகவல்..!
மீண்டும் கடுமையான ஊரடங்கு குறித்து மருத்துவ குழுவின் ஆலோசனைபடி முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கடுமையான ஊரடங்கு குறித்து மருத்துவ குழுவின் ஆலோசனைபடி முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்;- கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளோம். பிறந்து 3 நாளான குழந்தை முதல் வயதானவர்கள் வரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவதற்கான வசதி உள்ளது. மேலும் 50% நிமோனியா தாக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை மீட்டெடுத்து வருவது என்பது மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். நோய் தொற்றை தடுக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும்.
மீண்டும் கடுமையான ஊரடங்கு குறித்து மருத்துவ குழுவின் ஆலோசனைபடி முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் இருக்கக்கூடிய நீலகிரி, திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்களை இங்கு பராமரித்து குணமடைய செய்துள்ளனர். தற்போது கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய நிலையில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க நபருக்கு அறுவை சிகிச்சை வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் மருத்துவர்கள், அருமையாக கையாண்டு தங்கள் உயிரை பணயம் வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பிறகு அந்த நோயாளி நலமுடன் இருக்கின்ற நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.