income tax rain in jaya tv

ஜெயா தொலைக்காட்சி, அதன் சி.இ.ஓ. விவேக் இல்லம், கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் இன்றும் சோதனை தொடரும் என அறிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.



ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இல்லம், கோடநாடு எஸ்டேட் பங்களா என தொடரும் இந்த சோதனைகள் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டி.டி.வி தினகரனின் முக்கிய ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சோதனையை முடித்துக் கொண்ட வருமான வரித்துறையினர் எஸ்டேட்டுக்கு சீல் வைத்து அடைத்தனர். இன்றும் அங்கு சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ. விவேக் வீட்டில் சோதனை நடைபெற்றபோது போலீசாருக்கும் , விவேக் ஆதரவாளர்களிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கியது.

ஜெயா டி.வி.யில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, மிடாஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்ற வருகிறது.