வளைத்து வளைத்து ரெய்டு விடும் வருமான வரித்துறை !! துரை முருகனுக்கு வந்த சோதனை … திமுக அதிர்ச்சி !!
திமுக பொருளாளா் துரைமுருகன் வீட்டில் இன்று அதிகாலை மூன்று மணி முதல் வருமான வருமான வரித்துறையினரும், பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் துரை முருகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், கிறிஸ்துவ பாதிரியார் வீடு, வாணியம்பாடி திமுக செயலாளர் தேவராஜ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளார் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த 10 நாட்களாக துரை முருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வேலூர் காட்பாடியில் உள்ள காந்திநகர் துரை முருகன் வீட்டுக்கு வந்த 3 வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.
ஆனால் துரை முருகனும். கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என்றும், அதனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திமுக சட்டத் துறைச் செயலாளர் பரந்தாமன் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? என்ன அடிப்படையில் சோதனை செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என பிடிவாதமாக அங்கு நின்றிருக்கின்றனர். இதையடுத்து சோதனை செய்வதற்கான ஆவணங்களை துரை முருகன் தரப்பினர் கேட்க அது அவர்களிடம் இல்லை. இதனால் திமுக தொண்டர்கள் வருமான வரிதுறை அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேலாக அவர்களை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்கான ஆவணங்களை கொண்டு வந்தனர். அதன் பிறகு அதிகாலை மூன்று மணி முதல் அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் வாணியம்பாடி திமுக செயலாளர் தேவராஜ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது, மேலும் வேலூரில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த இரு இடங்களிலும் பணமோ, ஆவணங்களோ எதுவும் கிடைக்காமல் அவர்கள் திருப்பிச் சென்றனர்.
இந்நிலையில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்வி நிறுனங்களில் காலை 8 மணி முதல் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.