கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் உதவியுடன் கறுப்புப் பணம் மாற்றப் படுவதாகவும் இதில் சம்பந்தப்பட்டவா்களை அதிரடியாக நீக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கு இணையாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தவறான வழிகளில் ஈட்டப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது இந்த அதிரடி சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்ற போதிலும், அனைத்து மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பெருமளவில் கருப்புய் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை எனவும் மொத்தமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கும் அதிக மதிப்பில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டிருக்கிறது எனவும் அன்புமணி கூறியுள்ளார். இதில் மக்களும், விவசாயிகளும் செலுத்திய பணத்தின் மதிப்பு மிகவும் குறைவு என்றும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் தான் பெருமளவிலான பணத்தை செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது கூட்டுறவு வங்கிகளில் தணிக்கை மிகவும் குறைவு என்பதால், இந்திய ரிசர்வ் வங்கி, வருமானவரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவே ஆளும்கட்சியினர் கூட்டுறவு வங்கிகளில் பெரும் பணத்தை செலுத்தியுள்ளனர் எனவும் தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே இயக்குனர்கள் மற்றும் தலைவர்களாக பதவி வகிப்பதால் அவர்களும் இந்த கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் அன்புமணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலைவரும், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவருமான இளங்கோவன் வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது இதை உறுதி செய்கிறது எனவும் அண்புமணி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை என்பதாலும், அதில் போலியான பெயர்களில் பெருமளவில் கருப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் என்பதாலும் இது குறித்து தனி விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர தமிழக ஆளுனரும், தலைமைச் செயலரும் ஆணையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.