நீங்க திடீர் கோடீஸ்வரன் ஆகணுமா? செம ஐடியா கொடுக்கும் நம்ம வருமான வரித்துறை!!
பினாமி சொத்துகள், கருப்பு பணம் பற்றி தகவல் அளித்தால் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கும் திட்டங்களை வருமான வரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி துல்லியமான தகவல் அளிப்போருக்கு சிறப்பு பரிசு அளிக்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதன்படி வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போர் ரூ.50 லட்சம் வரை வெகுமதி பெற முடியும்.
இந்நிலையில், வருமான வரித்துறையின் நேரடி வரி வாரியம் ‘பினாமி பரிமாற்றம் தகவல் அளிப்போர் பரிசுத் திட்டம்-2018’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஒருவர் பினாமி பரிமாற்றம் மற்றும் சொத்துக்கள் குறித்து பினாமி தடைப் பிரிவு இணை அல்லது கூடுதல் ஆணையர்களுக்கு தகவல் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
.அதன் மீது திருத்தப்பட்ட பினாமி பரிமாற்ற தடை சட்டம்-2016-ன் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும். துல்லியமான தகவல் அளிப்பவருக்கு ரூ.1 கோடி வரை வருமான வரித்துறை பரிசு அளிக்கும். தகவல் அளிப்பவர்களின் விவரம். ரகசியமாக வைக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒருவர் துல்லியமான தகவல் அளித்தால் அவருக்கு ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கப்படும்.
கருப்பு பணத்தை கண்டுபிடிப்பது, வரி ஏய்ப்பை தடுப்பது ஆகியவற்றில் பொது மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ‘பினாமி பரிமாற்ற தகவல் அளிப்போர் பரிசுத் சட்டம்-2018’ வெளியிடப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.