Income tax deportment next target Jayalalithaa poes garden House
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எப்போதுமே இல்லாத அளவிற்கு வருமான வரித்துறையினர் அடுத்தடுத்து ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ஆளும் கட்சி அமைச்சர்களின் வீடு, அலுவலகம், உறவினர்கள் இல்லம் என சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும், தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருவதால் பல அமைச்சர்கள் பீதியில் உள்ளதாகவும், ஆவணங்கள் கைப்பற்றப்படும் நிலையில், தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருக்கிறது.
போயஸ் கார்டன் நண்பர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் தொடங்கிய இந்த பட்டியல் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி என நீண்டது இன்று ராதிகா வரை தொடர்கிறது. ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து ஏராளமான நம்பத்தகுந்த ஆதாரங்களை திரட்டியுள்ளது. இது ஆளுங்கட்சியை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுமட்டுமல்ல விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்பட 29 பேர் ரெய்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வருமானவரித்துறையினரின் அடுத்த குறி ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நெருங்ககூட முடியாத வருமான வரித்துறையினர் ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில், மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு நுழைய திட்டமிட்டுள்ளதாகவும், தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளும் தப்பாது என்றும் தகவல் கசிந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் கண்டிப்பாக ஆட்சி கவிழும் என்றும், அதனால் அடுத்து தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுத் தேர்தலாகத்தான் இருக்கும் என்றும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
