ஒரு இலை இபிஎஸ்… இன்னொரு இலை ஓபிஎஸ் … புதுசா விளக்கம் கொடுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் !!!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ம் தமிழகத்தின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செய்லபட்டு வருகின்றனர் என்றும் தற்போது மீட்கப்பட்டுள்ள இரட்டை இலையில் ஓர் இலை இபிஎஸ் மற்றொரு இலை ஓபிஎஸ் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இபிஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தாலும் அவர்களுக்குள் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருவது என்னவோ உண்மைதான். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் அதை எடுத்துக்காட்டின
இந்நிலையில்தான் மதுரை தோப்பூரில் அதிமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது.
ஆனால் இந்த கூட்டத்துக்கு இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்சை அழைக்கவில்லை. அதே போல் அந்த விழாவில் 100 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றப்பட்டது. அந்த கொடி கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இபிஎஸ் பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தது
இது ஓபிஎஸ் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரேயன் நேற்று இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்த மதுரையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், :எங்களுக்குள் எவ்வித இடைவெளியும் இல்லை.இடைவெளியை யாரும் ஏற்படுத்த முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக கட்சியை வழி நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்..
மதுரைதோப்பூரில் நடைபெற்ற விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வில்லை. கோவில் பூஜை விழாவில் பங்கேற்க செல்வதால் விழாவில் பங்கேற்க இயலாது என ஓபிஎஸ் கூறியதால்தான் அவர் இதில் பங்கேற்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரட்டை இலையில் ஒரு இலை ஓபிஎஸ் ஆகவும், ஒரு இலை ஈபிஎஸ் ஆகவும்தான் நாங்கள் பார்க்கிறோம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்சியை வழிநடத்த விட்டுச் சென்ற இரட்டையர்கள்தான் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் என அவர் கூறினார்.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். ஒவ்வொரு விசயத்திலும் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம்.மைத்ரேயனை சந்தித்து எனது தரப்பு விளக்கத்தை எடுத்து கூறுவேன் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்தார்.