மக்கள் சேவையே மகேசன் சேவை: கேதார்நாத்தில் பிரதமர் மோடி உருக்கம்!
கேதார்நாத்தில், கடந்த 2013 ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்தப் புனித நகரே சீரழிந்தபோது, அதை மறு சீரமைப்பு செய்ய என்னை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று கூறினார் பிரதமர் மோடி. மேலும், மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை என, நாட்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் கேதார்நாதருக்கு செய்யும் உண்மையான சேவை என்று கூறினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது கேதார்நாதர் ஆலயம். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் எனப்படும் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்கத் தலங்களில் முக்கியமானதாகவும் திகழ்கிறது கேதார்நாத். இன்று அங்கே சென்ற பிரதமர் மோடி, சிவபெருமானை தரிசனம் செய்தார்.
பின்னர், கேதர்நாத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அப்போது, “ஹிமாலய புனிதத்தலங்களை மிகவும் மேம்பட்ட தலங்களாக மாற்ற பாஜக., முயற்சி செய்துவருகிறது” என்று கூறிய மோடி, காங்கிரஸ் அரசுகளை குறை கூறினார். முன்னர் 2013 வெள்ளத்தின் பின்னர், குஜராத் முதவராக, பாழ்பட்டுக் கிடந்த இந்த இடத்தைப் பார்வையிட நான் வந்தேன். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வந்தேன். பின்னர் அப்போதைய மாநில முதல்வர் விஜய் பகுகுணா, அரசு அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து, கேதார்நாத்தை மீட்டெடுக்க, குஜராத் அரசு உதவ விரும்புகிறது என்று தெரிவித்தேன். அந்தக் கூட்டத்தில் என் விருப்பத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன் பின்னர், நான் வெளியில் ஊடகங்களைச் சந்தித்தபோது, இந்தத் தகவலைத் தெரிவித்தேன். கேதார்நாத்தை மறுகட்டமைப்பு செய்ய குஜராத் உதவும் என்று! ஆனால், இந்தத் தகவல், தில்லிக்கு ஊடகங்கள் மூலமாகச் சென்றது. அப்போதை ஐ.மு. கூட்டணி அரசு, அடுத்த சில மணி நேரங்களில் கூனிக் குறுகிப் போனது. என்ன ஆனதோ, உடனே மாநில காங்கிரஸ் அரசுக்கு மத்திய காங்கிரஸ் அரசு அழுத்தம் கொடுத்தது. அதனால், கேதார்நாத்தை உத்தராகண்ட் மாநில அரசே மறு கட்டமைப்பு செய்து கொள்ளும் என்று அறிவித்தது.” என்று கூறினார் மோடி.
இந்நிலையில், சென்ற வருடம் உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக., அரசு அமைந்தபின்னர், கேதார்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் நம்மால்தான் முடியும் என்பதை நாம் உணர்ந்தோம்” என்றார்.
உத்தராகண்ட் மாநில மக்களின் ரத்தத்திலேயே ஒழுக்கம் நிறைந்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் ராணுவ வீரராக இருப்பார். அடுத்த ஆண்டு, 10 லட்சம் பேர் கேதார்நாத்துக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக உத்தராகண்ட் விளங்க வேண்டும். கேதர்நாத்தில் நவீன உட்கட்டமைப்புகள் அமைக்கப்படும் வேளையில், இந்த இடத்தின் பாரம்பரிய ஆன்மா பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்படாமல் அனைத்து மறு சீரமைப்பும் நடத்தப்படும்.
தீபாவளிக்கு மறுநாள் நான் கேதார்நாத் வந்ததில் பெருமை அடைகிறேன். குஜராத்தில் இன்று புதிய ஆண்டின் துவக்கத்தைக் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று பேசினார் மோடி.
முன்னர் 2013ல் குஜராத் அரசு ரூ.3 கோடிக்கான காசோலையை உடனடியாக மாநில அரசுக்கு வெள்ள நிவாரணத்துக்காக அளித்தது. மேலும் ரூ. 2 கோடியை அளித்தது. ஆனால், காசோலையை திருப்பி அனுப்பியது உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் அரசு. மோடி தன்னை ஒரு தலைவர் போல் கருதுகிறார் என்றும், இயற்கைப் பேரழிவை மத ரீதியாக அணுகுகிறார் என்றும் விமர்சித்தது என்பது குறிப்பிடத் தக்கது.