நம்முடைய இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், நாம் இணைந்து பணியாற்றினால், தற்போதைய வேகத்தை இன்னும் கூட்டினால், இலக்கை அடைவதற்கான நேரம் பாதியாக மாறிவிடக்கூடும். 

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா

அகண்ட பாரதம் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாக்காளில் ஒன்று. அகண்ட பாரதம் பற்றி அதன் தலைவர்கள் பேசுவது வழக்கம். அண்மையில் ஹரித்வாரில் நடந்த விழா ஒன்றில் அகில பாரதிய அஹாரா பரிஷத் தலைவர் சுவாமி ரவீந்திர புரி ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதாவது, “ஜாதக கணிப்புப்படி அடுத்த 20 - 25 ஆண்டுகளில் அகண்ட பாரதம் என்ற கனவு நனவாகும்” என்று சுவாமி ரவீந்திர புரி தெரிவித்திருந்தார். இவரைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இதே கருத்தைத் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என்று தத்துவ ஞானியான அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தரும் சுவாமி விவேகானந்தரும் கூறியதில் நான் முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

25 ஆண்டுகளில் அகண்ட பாரதம்

இதேபோல இந்தியா குறித்து சுவாமி ரவீந்திர புரி கூறியதிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போலவே நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் என்பது விரைவில் சாத்தியமாகும். இதனை நான் என்னுடைய சொந்த கணிப்பின்படி சொல்கிறேன். ஜாதகக் கணிப்புப்படியெல்லாம் நான் கூறவில்லை. நம்முடைய இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், நாம் இணைந்து பணியாற்றினால், தற்போதைய வேகத்தை இன்னும் கூட்டினால், இலக்கை அடைவதற்கான நேரம் பாதியாக மாறிவிடக்கூடும். நல்லது செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர் கூறியதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 

யாராலும் தடுக்க முடியாது

ஆனால், தீயதைச் செய்பவர்கள் அழிக்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் இந்தியா வரவேற்றிருக்கிறது. இந்தியா தன்னுடைய இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி செல்பவர்கள் விலகி சென்றுவிட வேண்டும்.” என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.