2026-ஆம் ஆண்டில் திமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய் விடும். பாஜகதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பாஜகவின் தமிழக இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் சிவகாசிக்கு வந்த அவர் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக அரசு எந்த வகையில் எங்களைத் தடுத்தாலும் மத்தியில் உள்ள பாஜக அரசின் எட்டாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். 2026-ஆம் ஆண்டில் திமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய் விடும். பாஜகதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.

பட்டாசு தொழில் முடங்கிப் போகாமல் பாதுகாக்க சீன பட்டாசுகளை இறக்குமதி செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதனால்தான் இன்றைய தினம் பட்டாசு தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய காரணமே மத்திய அரசுதான். உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தொழில் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் மத்திய அரசு சார்பாக அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்தப் பொருளும் வெளிநாடுகளில் விற்பனையாகி இந்தியாவுக்கு பெருமை சேரக் கூடாது என நினைக்கிறது. சீன பட்டாசு முற்றிலும் வீழ்ச்சி அடைந்து இந்திய பட்டாசுகள் உலக நாடுகள் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலமாக பட்டாசு தொழிலுக்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறந்த தலைவர். அவர் முதல்வராக வரலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது” என்று ரமேஷ் சிவா தெரிவித்துள்ளார்.
