2024ல் திமுகவுக்கு டீஸர்.. 2026ல் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும். இதனையடுத்து 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு தொழிலாளர்களின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பதே இல்லை. விளம்பர அரசியலைத்தான் திமுக அரசு செய்கிறது. தொழிலாளர்களை வஞ்சிக்கிற அரசாகவும் திமுக அரசு இருக்கிறது.
கொலை, கஞ்சா, போதை, கூட்டு பாலியியல் ஆகியவற்றில்தான் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எல்லாம் குளிர்விட்டு போய்விட்டது. தமிழகத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும். திமுக அரசு பொய் வழக்கு போட்டு அதிமுகவினரை கைதுசெய்யும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது. அரசியல் தலையீடு இருப்பதால்தான் காவல் துறையால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை. திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.
எப்போதும் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும். இதனையடுத்து 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியை பிடிக்கும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.