நாளை கூடுகிறது பா.ஜ.க. தேசிய செயற்குழு - 337 எம்.பி.க்கள், 1,400 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
டெல்லியில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் பா.ஜ.க.தேசிய செயற்குழு கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் விரிவடைந்த தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை தொடங்குகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தத்துவ வழிகாட்டியான தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெறும் இந்த விரிவுபட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 337 பேர் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 1,400 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் 2,000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இக் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர்.. பிரதமர் மோடி திங்கட்கிழமை அன்று நிறைவுரை ஆற்ற உள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த காலாண்டில் 5.7 சதவீதமாக மிகவும் மோசமாக சரிவடைந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
பிரதமர் மோடி அறிவித்த செல்லா பண திட்டத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
மேலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று தொடங்கும் பா.ஜ.க.தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியின் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கறுப்புபண ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் கருதப்படுகிறது.
மேலும் ஜி.எஸ். டி. வரியை கொண்டு வந்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தத்துவ வழிகாட்டிகளில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுவதால் அவரது கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.