"மம்தா பானர்ஜி மன்னிப்பு கோர வேண்டும். மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்." என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்க மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும்14 வயது மாணவி ஒருவர், கடந்த 4-ஆம் தேதி பிறந்தநாள் விழாவுக்கு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய மாணவி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த மாணவியை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

மம்தாவின் சர்ச்சை கருத்து
பிறந்த நாள் விழாவுக்கு சென்றபோது மாணவியை பாலியல் கூட்டு வன்கொடுமை செய்ய காரணமாக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகனை போலீஸார் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாலியல் வன்கொடுமை தொடர்பாக மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதனையடுத்து இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது. ஐந்து பேர் கொண்ட அந்தக் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை குஷ்பூ, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

குஷ்பு ஆவேசம்
இந்தக் குழுவினர் இன்று மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றனர். உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்தனர். பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “14-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கண்டனத்திற்குரிய ஒரு கருத்தை பெண் முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக மம்தா பானர்ஜி மன்னிப்பு கோர வேண்டும். மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று குஷ்பு தெரிவித்தார்.
இதேபோல் குழுவில் இடம் பெற்றிருந்த இன்னொரு பாஜக எம்.பி ரேகா வர்மா கூறுகையில், “சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை முதல்வர் மம்தாவால் ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று தெரிவித்தார்.
