துபாய், சிங்கப்பூரையும் விட்டு வைக்காத சசி வகையறா! இளவரிசி குடும்பத்தை ரவுண்டுகட்டும் ஐ.டி.!
வருமான வரித்துறையின் சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வெளிநாடுகளில் பதுக்கி உள்ளதாகவும், இதனால் இளவரசியின் மகன் மற்றும் மகள்களிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் கடந்த 9 ஆம் தேத முதல் தொடர்ந்து 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் 187 இடங்களில் 1800 அதிகாரிகளைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் 6 நாட்களாக சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆவணங்களின் அடிப்படையில் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் ஷகிலா, கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் நேரில் விளக்கமளித்தனர்.
ஜெயா டிவியின் மேலாளர் நடராஜன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த வெள்ளி அன்று சென்னை போயஸ் தோட்டத்தல் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பென்டிரைவ், கம்யூட்டர்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர், பென்டிரைவ் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட தகவல்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சொத்துக்களின் ஆவணங்களை பெட்டிகளில் அடைத்து அவற்றை விமானங்கள் மூலம் சிங்கப்பூர், துபாய்க்கு அனுப்பி வைத்ததற்கான ரசீதுகளும் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், இளவரசியின் மகன் மற்றும் மகள்களிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாகவும், இளவரசி குடும்பத்தாரிடம் மட்டும் விசாரிக்க தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. விமானங்கள் மூலம் சென்ற ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகள் வெளிநாடு செல்லவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.