"பணம் சம்பாதிக்கணும்னா திமுகவுக்கு போங்க..!” கொதிக்கும் கமல்.. காலியாகுமா மய்யத்தின் கூடாரம்..?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது மற்ற கட்சிகளை பொறுத்தவரைக்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் ஒற்றை இலக்க சதவிகிதத்தை மட்டுமே எட்டியது
பாமக, தேமுதிக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், என பெரும்பாலான கட்சிகள் 1சதவிகித வாக்குகளும் அதற்க்கு குறைவான வாக்குகளையும் பெற்றது. இது யாருக்கு பாதிப்பு என்று பார்த்தால் அடுத்து நாங்கள் தான் தமிழகத்தில் ஆட்சி என கூறிவரும் நாம் தமிழருக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் தான் என கூறப்படுகிறது.
இந்த தேர்தல் தோல்வி மிகப்பெரிய அதிர்ச்சியை அந்த கட்சிகளுக்கு வழங்கியுள்ளது. ஆளுங்கட்சி கோடிக்கான பணத்தை செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி காட்சி மூலம் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியவர், முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நினைப்பில் தான் அரசியலிலுக்கு வரவில்லையெனவும், அரசியலை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே அரசியலுக்கு வந்ததாக கூறினார்.
தான் காந்தியின் கொள்ளு பேரன் என்றும் காந்தியின் அதே வைராக்கியத்துடன் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார். மக்கள் நீதி மய்யத்திற்கு ஏற்பட்ட சறுக்கல் எதிர்பார்ததுதான் எனவும் கூறினார். நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற பலர் காசு கொடுத்து வாங்கிய வெற்றி என விமர்சித்த கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம் நேர்மையாக பெற்ற ஒவ்வொரு வாக்குகளும் மதிப்பு மிக்கது என தெரிவித்தார். வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்து அரசியலுக்கு வந்தவர்களுக்கு தான் தோல்வியை தாங்க முடியாது எனவும் தவறு செய்ய நினைக்காதவர்கள், நேர்மையானவர்கள் மட்டும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்தால் போதும் மற்றவர்கள் திமுக போன்ற கட்சிக்கு சென்றாலும் கவலையில்லையென கூறினார். கமலின் இந்த உணர்ச்சிபூர்வமான மற்றும் மிரட்டல் பேச்சு தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மாநகராட்சி பகுதியில் 1.82 சதவிகித வாக்குகளும், நகராட்சியில் 0.21 சதவிகித வாக்குகளும் பேரூராட்சியில் 0.07 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தங்கள் கட்சியை மாற்றத்திற்கான கட்சிகளாக மக்கள் நினைக்கவில்லையோ என நினைக்க தொடங்கியுள்ளனர்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பரவலாக வாக்குகளை பெற்றாலும் தோல்வியையே தழுவியது. கமல் மட்டும் போராடி கடைசி நேரத்தில் பாஜகவின் வானதி ஶ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலை தொடர்ந்தே மக்கள் நீதி மய்யத்தில் கோவையை சேர்ந்த முக்கிய நிர்வாகி மட்டுமில்லாமல் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். எனவே தற்போதைய தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தோற்றதால் மீதமுள்ளவர்கள் என்ன செய்வதென்று சிந்தனையில் உள்ளனர்.