கெபிராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம்.. சிபிசிஐடி போலீஸ் தொலைபேசி எண் அறிவிப்பு.
பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில், அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில், அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெபிராஜ் மீது கேரள மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது கெபிராஜை அவரது பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று அவர் பயன்படுத்திய கணினி-யின் சி.பி.யூ, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கெபிராஜால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராயினும் அவர் மீது புகார் அளிக்கலாம் எனக்கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் 9498143691என்ற தொலைபேசி எண்ணும், atccbcid@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டு வாழ் பெண் ஒருவர் பயிற்சியாளர் கெபிராஜ் மீது இணைய வழியில் தானும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கும் பயிற்சியின்போது கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜ் மீது மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும், புகார் அளித்த பெண் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கெபிராஜை மீண்டும் இந்த வழக்கில் கைது காட்டும் பொருட்டு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.