பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தால் பெரிய ஆபத்து என்ற நிலைமை வந்துவிட்டது.. முத்தரசன் நையாண்டி.!
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அங்குள்ள அரசுகளுக்குத் தொல்லை கொடுக்கவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறையில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வழக்கமாக பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றால், நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கப்போகிறது என்று நினைப்போம். ஆனால், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தால், நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து நடக்கப்போகிறது என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது மிகுந்த கவலைக்குரியது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டங்களை இயற்றுவது, அச்சட்டங்களின்படி நடவடிக்கை எடுப்பது போன்ற காரணங்களால் பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது.
தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர்களை மாற்றுவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்று மோடி நினைப்பது பகல் கனவாகத்தான் முடியும். மறைமுகமாக மனுதர்மக் கொள்கையைப் புகுத்தும் உள்நோக்கம் கொண்டதுதான் நீட் தேர்வு. இந்த நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைப் பாதையைத் தேர்வு செய்யக் கூடாது. சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, நிலைமையைப் புரிந்துகொண்டு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதலை தர வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும்.
மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும். கொள்கை ரீதியாக உருவானதுதான் திமுக கூட்டணி. அந்த அணியில் எந்தச் சலனத்துக்கும் இடமில்லை. கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அங்குள்ள அரசுகளுக்குத் தொல்லை கொடுக்கவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகளை எதிர்த்து அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபடுவது தவறாகும்” என்று முத்தரசன் தெரிவித்தார்.