கூட்டணியில் மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி... அதிமுகவை அலறவிடும் பிரேமலதா..!
அதிமுக கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கவேண்டும் தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது. திடீரென்று தனித்து போட்டி என்றும் பல்டி அடிக்கிறது. ஆனால், தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், தேமுதிக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் தேமுதிக தங்கள் முக்கியமான கட்சி கூட்டத்தை நாளை (31-01-21) கூட்டியுள்ளது. விஜயகாந்த் - பிரேமலதா திருமண நாளையொட்டி முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது அக்கட்சித் தொண்டர்கள் கூட்டணி குறித்த பல சந்தேகங்களை முன்வைத்தனர். அதற்குப் பதிலளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார். பிரேமலதாவின் இந்த அறிவிப்பால் தேமுதிக சார்பில் நாளை நடைபெற உள்ள கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.