முடிந்தால் நகர்புற தேர்தலில் ஜெயித்துகாட்டு.. நாடாளுமன்ற தேர்தலை பிறகு பார்க்கலாம்.. OPSஐ புரட்டி எடுத்த மா.சு
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 10 நாட்களாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் 9 மாத திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு மிகப் பெரிய அங்கீகாரத்தை தந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செல்லும் வழியெல்லாம் மக்கள் பேராதரவு தருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெல்லும் என்று கூறினார்.
முதலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், பிறகு நாடாளுமன்ற தேர்தலை பற்றி பேசலாம் என ஓபிஎஸ் இன் கருத்துக்கு அமைச்சர் மா .சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
பல்வேறு யுக்திகளை கையாண்டு பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா தொற்று, மழை வெள்ள நிவாரணம் போன்ற பணிகளில் அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வில்லை என தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை, நீட் தேர்வில் விலக்கு பெற முடியவில்லை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1000 என்ற வாக்குறுதியை நிறைவற்ற வில்லை என்ற விமர்சனத்தை அதிமுக பாஜக இரண்டு கட்சிகளை திமுகவுக்கு எதிராக முன் வைத்து வருகின்றன.
இந்நிலையில் நகர் புற உள்ளாட்சி தேர்தலிலும் இதையே திமுகவுக்கு எதிரான பிரச்சார யுக்தியாக அக்கட்சிகள் கையாண்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், விரைவில் நாடு முழுவதும் ஒரே தேர்தல் திட்டம் வர உள்ளது என பேசியுள்ளார். மேலும், தமிழகத்தில் அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் அதிகமுறை ஆட்சி புரிந்தது கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் தேவைகளை உணர்ந்து ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். ஜெயலலிதா கண்ட கனவுகளையும் திட்டங்களையும் அதன்பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். கடந்த 10 ஆண்டுகள் அதிமுகவின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் நடந்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சி புரியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் திமுகவின் பொய் வாக்குறுதிகளால் அது நிறைவேறவில்லை. மொத்தமாக 505 பொய் வாக்குறுதிகளை திமுக வழங்கியது, ஆனால் அதை உருப்படியாக அவர்கள் நிறைவேற்றவில்லை, நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் திமுக நல்ல பாடம் கற்பிக்கும் தேர்தலாக நிச்சயம் அமையும். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது ஆனால் தொண்டர்களை கட்டிக்காக்கும் கட்சி அதிமுக தான். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழக சட்டமன்றத்திற்கு முழுமையாக தேர்தல் வரும். அதிமுகவுக்கு சாதகமான அரசியல் சூழல் நிலவுகிறது என அவர் கூறினார். அப்படி என்றால் திமுகவின் ஆட்சி இன்னும் 2 ஆண்டுகளில் கலைக்கப்பட்டு தேர்தல் வரும் என்பதுதான் அவர் கூறியதின் உள் அர்த்தம். இதேபோல எடப்பாடி பழனிச்சாமியும் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
இவர்களது பேச்சை திமுகவினர் கடுமையாக கண்டித்து வருகின்றனர். பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 173வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் திருவன்மியூர் ஈபி ஆபீஸ் அருகில் வீடுதோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 173 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுபாஷினிக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறோம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 10 நாட்களாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் 9 மாத திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு மிகப் பெரிய அங்கீகாரத்தை தந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செல்லும் வழியெல்லாம் மக்கள் பேராதரவு தருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெல்லும் என்று கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு, முதலில் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வெற்றி பெறட்டும், பிறகு நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி பேசலாம் என்றும் கூறினார். மேலும் திமுக அல்வா கொடுத்து ஆட்சிக்கு வந்தது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறித்த கருத்திற்கு பதில் அளித்த மாசு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை அனைவரும் அறிவீர்கள், நீர் ஆவியாவதை தடுப்பதற்கு தெர்மாகோலை வைத்தவர். அல்வா தந்த ஊர் பக்கத்தில் இருப்பதால் அவருக்கு அல்வாவை பற்றி மட்டும்தான் தெரியும் என நகைச்சுவையாக பதிலளித்தார்.