இப்படியே ஒருத்தர் ஒருத்தரா வெளிய அனுப்பினா கட்சி வெளங்கிடும்... ரத்தம் கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.!
தம்மை எதிர்த்து குரல் எழுப்பும் பலரையும் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க ஓபிஎஸும் இசைந்து நிர்வாகிகளை வெளியேற்றி வருகிறார்.
அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு முன்னாதாக, கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்.பி-யும் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா, அதிமுக தலைமையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததையடுத்து அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டாக வெளியிட்ட அறிக்கையி ல், ராஜாவை அதிமுகவில் இருந்தும் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவித்தனர். ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும், கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்திற்காகவும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என்று அறிவித்தனர்.
சமீபத்தில், அன்வர் ராஜா அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் இலக்குகளில் இருந்து விலகியது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைக்க அன்வர் ராஜா எழுந்தார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிர்ச்சியடைந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நேர்காணலில் பங்கேற்ற அன்வர் ராஜா, எடப்பாடி பழனிசாமியை சின்ன அம்மா (சசிகலா) தான் முதலமைச்சராக்கினார் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாலும், அதிமுக இரட்டைத் தலைமையுடன் முரண்பாடான அணுகுமுறையை மேற்கொண்டதாலும் அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டது பாஜக கூட்டணியை எதிர்ப்பவர்களுக்கும், அதிமுக ஒன்றுபடவேண்டும் என்று வலியுறுத்துவோருக்கும், அதிமுகவில் இடமில்லை. அதிமுக பாஜகவின் அடிமை கட்சியாகவே செயல்படும் என்கிற ஓ.பி.எஸ், ஈபிஎஸின் கொள்கை அதிமுகவை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் போக்கையே காட்டுகிறது. அதிமுகவில் இருந்த பலரும் பாஜகவுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தம்மை எதிர்த்து குரல் எழுப்பும் பலரையும் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க ஓபிஎஸும் இசைந்து நிர்வாகிகளை வெளியேற்றி வருகிறார். இது கட்சியை அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும்’’ எனக் கொந்தளிக்கிறார்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள்.
அதிமுகவில் இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக கருதப்பட்டவர் அண்வர் ராஜா. அவரது நீக்கம் சிறுபான்மை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அவர்கள் தங்களது கருத்துக்களை கடுமையாக முன் வைத்து வருகிறார்கள். கட்சியில் நடக்கும் நடு நிலைமையான கருத்துக்களை எடுத்துக் கூறினால் அதனை தலைமை ஏற்றுக் கொண்டு சரி செய்ய வேண்டும். அதனை விடுத்து தவறுகளை எடுத்துக் கூறுபவர்களை கட்சியை விட்டு நீக்கினால் அந்த கட்சி அழிவுப்பாதைக்கு செல்லும் என்பதே நிதர்சனம் என்கிறார்கள் அதிமுகவில் உள்ள நிதர்சனம் அறிந்தவர்கள்.