நன்றி மறக்க மாட்டேன்... சசிகலாவை சந்தித்து உணர்ச்சி பொங்கிய சரத்குமார்..!
ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும் போது சசிகலா உடனிருந்தார்
சென்னை தியாகராய நகரில் சசிகலா உடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சந்தித்து பேசினர். ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தங்கியிருக்கும் சென்னை டி.நகர் வீட்டில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் டி.நகர் சென்று சசிகலாவை சந்தித்து பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘’நானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து மீண்டவன். அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியும். அதனால் சசிகலாவை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக மட்டுமல்ல, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மட்டுமல்ல. அவரது உடல் நலத்தை மனதில் கொண்டுதான் நன்றி தெரிவிக்க சசிகலாவை சந்தித்தேன். சசிகலா உடன் குடும்பம் போல் பழகியதால் நன்றி மறவாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகாலமாக சசிகலாவை எனக்கு தெரியும். நன்றி மறப்பது நன்றன்று.
தேர்தல் கூட்டணிக்காக மட்டுமல்ல. சசிகலாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தோம். நான் 1 அல்லது 2 சீட்டுக்கள் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று தான் சொன்னேன். அதிகமாக சீட் கேட்கவில்லை. அதனைப்பற்றி இந்த இடத்தில் பேசுவது உகந்தது ஆகாது. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும் போது சசிகலா உடனிருந்தார்’’ என சரத் குமார் தெரிவித்தார்.